கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்குமான இடைவெளியை அதிகரிக்குமாறு வல்லுனர் குழு கூறிய பரிந்துரையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆறு முதல் எட்டு வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழு பரிந்துரைத்தது.
கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த 6 மாதத்திற்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் நிபுணர் குழு தெரிவித்தது.

அதேநேரம், இந்த குழு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான இடைவெளியில் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்கவில்லை. நிபுணர் குழுவின் இந்த பரிந்துரையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, இரண்டு தவணைகளுக்கான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.







