இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, 2020ம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவிலிருந்து கேரளாவுக்கு திரும்பிய மாணவி மூலம் முதல் முறையாக கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு நுழைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்தது. வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. பின்னர் மீண்டும் இரண்டாவது அலை எழத் தொடங்கியது.
முன்பை விட அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். ஒருபக்கம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் பரவல் முழுவதும் குறைந்துவிட்டது என்று கருதிய நிலையில், தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது.
மும்பையில் கடந்த சில மாதங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைரஸ் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிர அரசு அனைவரையும் முகக் கவசம் அணியுமாறு கட்டாய உத்தரவும் பிறப்பித்துள்ளது. கேரளாவிலும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்தியாவில் கடந்த 94 நாட்களுக்கு பிறகு 5,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை மொத்தம் 4.31 கோடி பேர் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.
-மணிகண்டன்