இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 248,437,919 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,43,08,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக செலுத்தி வருகிறது. இதில் கோவீஷீல்டு செலுத்திக்கொண்டவர்களுக்கு வெளிநாடுகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை.
ஆனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நிலையில் குறிப்பிட்ட நாட்கள் வரை தங்களை தனிமைப்படுத்தக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த சூழலில் கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்த தடுப்பூசி குறித்த தகவல்களை ஐநாவின் தொழில்நுட்ப குழு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் சமீபத்தில் கேட்டு பெற்றது.
இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐநாவின் உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.
https://twitter.com/WHO/status/1455869992965181441
இந்த தடுப்பூசி தொற்றுக்கு எதிராக 77.8 சதவிகிதம் செயல்திறனை கொண்டுள்ளதாகவும், டெல்டா வெரியன்ட்க்கு எதிராக 65.2 சதவிகிதம் செயல்திறனை கொண்டுள்ளதாகவும் இதனை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை இந்தியாவில் ஏறத்தாழ 10 கோடிக்கும் அதிகமானோர் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








