லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதனையடுத்து, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக நடிகர் விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, திரைப்படம் ஏற்கனவே வெளியாகிவிட்டது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மூன்றே வாரங்களில் 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என்று நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தொகையைச் செலுத்தியபின் அதன் ரசீதை நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.