சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் சாதிய வன்மத்தால் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இறுதி தீர்ப்பு ஆகஸ்ட் மூன்றாம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இவ்வழக்கு இதுவரை கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு, கச்சநத்தம் ஆகிய இரு கிராமங்கள். இக்கிராமங்களில் வாழும் இரு வேறு சமுதாய மக்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு என சொல்லப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி கச்சநத்தம் கிராம இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஆவரங்காடு கிராமத்தில் சிலர் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் ஆவரங்காடு மக்கள் கத்தி உட்பட கடுமையான ஆயுதங்களுடன் கச்சநத்தம் சென்று வீடு புகுந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பட்டியலின சமுதாய மக்கள் ஆறுமுகம் ,சண்முகநாதன், சந்திரசேகரன் ஆகிய மூன்று பேர் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஐந்து பேர் கடுமையாக தாக்கப்பட்டனர். படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ஒன்றரை லடசம் ரூபாயும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இந்த சாதீய வன்ம படுகொலை வழக்கில் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 33 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு நடைபெற்று வந்த நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் குற்றம் சாட்டப்பட்டோரில் பெண் உட்பட 9 பேர், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் சாதிய வன்மத்தால் நடத்தப்பட்ட கச்சநத்தம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். நான்கு ஆண்டுகளைக் கடந்தும் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி கச்சநத்தம் கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வழங்கப்படும் என சிவகங்கை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி வன் கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். அத்துடன் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் தவிர மற்றவர்கள் யாரும் நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது. தீர்ப்பின் விவரங்களை ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே நீதிமன்ற வளாகத்தில், சிவகங்கை மாவட்ட காவல் துறை கன்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 33 பேரில், 2 பேர் இறந்து விட்டனர். வழக்கில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி 27 பேரை குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும், இறுதி தீர்ப்பின்படி தண்டனை விவரங்களை ஆகஸ்ட் மூன்றாம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
-ம.பவித்ரா