சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது பெத்தேல் நகர். இங்கு வணிக வளாகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளன. மேய்க்கால் புறம்போக்கு பகுதியான பெத்தேல் நகரில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி ஐ.ஹெச்.சேகர் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதின்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் 1,052 வணிக கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் 1,007 நிறுவனங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும், 65 சுற்றுசுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: நகர்புற உள்ளாட்சி தேர்தல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் மனு தாக்கல்
அப்போது நீதிபதிகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு அனைத்தும் திறக்கப்பட்டும், அனுமதிக்கப்பட்டும் உள்ள நிலையில், இந்த இடத்திற்கு மட்டும் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டுவதா என கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், பெத்தேல் நகர் பொதுமக்கள் தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர், தெரிவித்தார்.
பெத்தேல் நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தரப்பு மனுக்களையும், அரசு தரப்பு கூடுதல் மனுவையும் வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.