“சமுதாயத்தை ஊழல் கரையான் போல செல்லரித்துள்ளது” – சென்னை உயர்நீதிமன்றம்

ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ரூ.1,500  லஞ்சம் பெற்ற புகாரில் பணி இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து காவல்துறை அதிகாரி…

ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ரூ.1,500  லஞ்சம் பெற்ற புகாரில் பணி இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து காவல்துறை அதிகாரி பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம், பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என அனுமதி அளித்த நீதிபதிகள், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தினந்தோறும் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வும் வழங்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், லஞ்சம் பெறுவது தற்போது வாடிக்கையாகிவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க வைத்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.