வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸின் கோரப்பிடியில் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா சிக்கி வெளிவர முடியாமல் தவித்து வருகிறது. மேலும், இந்தியா உட்பட பிற நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக அமெரிக்காவில் கொரோனா அதிவிரைவாக பரவிய சமயத்தில் சீனாதான் கொரோனா வைரஸை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் பரப்பியது என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியை அவர் நிறுத்தி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சீனாவில் கொரோனா உருவானது எப்படி என்ற ஆராய்ச்சியை விரைவில் மேற்கொள்வோம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஆனால், அதற்கு சீனா சம்மதம் தெரிவிக்காமல் மறுத்து வந்தது. பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் வூஹானில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலக சுகாதார அமைப்புக்கு சீனா அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த மாத இறுதியில், உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் வூஹானில் ஆராய்ச்சியை துவக்கினர். முதலில் இவர்கள் அங்குள்ள ஆய்வகங்கள், இறைச்சி சந்தை உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டனர். அத்துடன் கொரோனாவால் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரி பீட்டர் பென் எம்பரெக், வூஹானில் உள்ள பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். அத்துடன் 2019 ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவவில்லை. தங்களது ஆராய்ச்சிக்கு சீனா முழு ஒத்துழைப்பு தந்தது என தெரிவித்தார்.