நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவரச ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், சில நாட்களாக தொற்றுப் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், ஒரு லட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 10.21 சதவிகிதமாக உள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 3,623 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து மத்திய அரசு விலக்களித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக உயர்மட்டக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவல் கடந்த சில நாட்களில் பல மடங்கு அதிகரித்துள்ளதால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது.








