கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு பெற வேண்டிய கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்த தொகையையே தனியார் மருத்துவமனை வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க சுகாதார துறை தரப்பில் சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கையும் 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.







