தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 6ம் தேதி தான் கிடைக்கும் என்பதால், ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், படிப்பாடியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகள், நாளை வரை மட்டுமே போதுமானது என்ற தகவல் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தமிழகத்திற்கு இதுவரை 96 லட்சத்து 10 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், இதுவரை 87 லட்சத்து 70 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மே மாதத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்பூசிகளில் 1 லட்சத்து 47ஆயிரம் வர வேண்டி உள்ளதாகவும், இது நாளை வரும் என எதிர்பார்க்கபபடுவதாகவும் கூறினார். ஜூன் மாதத்திற்கு 48 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கான முதல் தவணை ஜூன் 6ம் தேதி தான் கிடைக்கும என்பதால் ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.