கொரோனா தடுப்பூசி விலை ரூ. 200 -சீரம் நிறுவனம்

இந்தியாவில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முன்கள பணியாளர்கள் மூன்று கோடி பேருக்கு, தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…

இந்தியாவில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முன்கள பணியாளர்கள் மூன்று கோடி பேருக்கு, தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வரும் 16ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், காணொலி வாயிலாக, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர், கொரோனா காலத்தில் அனைவரும் ஒற்றுமையாகவும், விரைவாகவும் செயல்பட்டது திருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக, உலகின் பல நாடுகளில், பரவியதுபோல், இந்தியாவில் கொரோனா பரவவில்லை என அவர் கூறினார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முன்களப் பணியாளர்கள் சுமார் 3 கோடி பேர் உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இவர்கள் அனைவருக்குமான தடுப்பூசி செலவை மாநில அரசுகள் ஏற்கத் தேவையில்லை என்றும், இதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில், 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு விதமான தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதும், அவற்றை அவசரகாலத்தில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு, ஒரு டோஸ் 200 ரூபாய்க்கு கிடைக்கும் என்று, அதனை தயாரித்துள்ள சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து, இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட் என்ற நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்துள்ளது. முதற்கட்டமாக தடுப்பூசி போடும் பணி வரும் 16ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை, சீரம் நிறுவனம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply