தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று துவங்கியது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம்கள் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2வது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
-ம.பவித்ரா