கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், தன்னார்வலர்கள் பலர் இரவு முதல் ரத்த தானம் செய்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலாசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். பாலாசோரில் இரவுக்குள்ளாக மட்டும் 500 யூனிட் ரத்தம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டுள்ளதாகவும். தற்போது 900 யூனிட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஒடிசா தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா, “உன்னத நோக்கத்திற்காக ரத்த தானம் செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடமைப்பட்டிருக்கிறேன் மேலும் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







