இந்தியாவில் புதன்கிழமை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,313 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி மேலும் புதிதாக 20,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,39,59,341 ஆக உள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,46,323ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து 19,216 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 86 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 40,69,241 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








