காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இதனையடுத்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே, தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம்.
எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் பிரதமர் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார். பாஜக அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, “நான் பேசியதை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். பஹல்காம் தாக்குதலால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனது குடும்பம் ராணுவ பின்னணியைக் கொண்டுள்ளது. நான் சோகமான இதயத்துடன் பேசியபோது, சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால், 10 முறை மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். மதத்தை தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். இராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதான அவதூறு கருத்துக்கு தன் மீது வழக்குப்பதிவு செய்ய ம.பி. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அமைச்சர் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரிக்கை அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள்”அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிக்க கூடாது. அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்” என கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கை நாளை (மே 16) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.








