நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது மற்றும் கூட்டணி இடப்பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், பாதிப்பு ஏற்படாத வகையில் உடன்பாடுகள் எட்டப்படும் எனவும், சுமுக சூழ்நிலையில், ஒருமித்த கருத்தோடு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு என்பதை கட்சி முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பொங்கல் தொகுப்பில் 500 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனை சிபிஐ விசாரிக்க அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார். தார்மீக அடிப்படையில் உணவுத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
https://twitter.com/news7tamil/status/1487716388437635072
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








