மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை முடிவு செய்யும் அரசு, அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்தி முடிப்பதில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர் 2019-ல் பொதுநலவழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில் 160 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளை 2020-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்தை முடிக்க மேலும் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் வகுப்பதுடன், அவற்றைச் செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை முடிவு செய்யும் அரசு, அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்தி முடிப்பதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கும், அரசுத் துறைகளின் செயல்பாடுகளுக்கும் அந்தந்த துறைகளில் மேற்கொள்ளும் பணிகளைக் கண்காணிக்கும் செயலாளர்களே பொறுப்பாவார்கள் எனவும் நீதிபதிகள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு வரும்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்களுக்குப் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பொறுத்தவரை இனி யாருக்கும் தயவு காட்ட மாட்டோம் என்றும் எச்சரித்தார். மடிப்பாக்கம் பாதாளச் சாக்கடை திட்டத்தை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்த விசாரணையின்போது, கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.








