கோடைக்காலத்தின் கடும் வெயிலை எதிா்கொள்வதற்காக தேசிய அளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாட்டில் கோடை வெயிலின் அதிகமாக இருக்கும் ஏப்ரல்-மே மாதங்களில் அனல் காற்று வீசுவதும் அதிகரிக்கும். இதனால், கால்நடைகள், மனிதா்கள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதால், இதனைத் தடுக்க தேசிய அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கூட்டத்தில், வெயிலின் தாக்கம் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்வது, உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவம் சாா்ந்த முன்னேற்பாடுகள், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இதையும் படிக்க: வடமாநிலத்தவர் விவகாரம்: வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிக்கு தற்காலிக முன்ஜாமின்
மேலும், உணவு தானியங்களை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க இந்திய உணவுக் கழகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக வழங்க வானிலை ஆய்வு மையத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள், வானொலிகளும் மக்களிடம் வெயில் அதிகரிப்பு தொடா்பான தகவல்களை எடுத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டன என்று பிரதமா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா