தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் 100 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 100 வயதை கடந்த 50 ஓய்வூதியர்களில் முக்கியமானவர் 1916 ஆம் ஆண்டு பிறந்த நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த 107 வயதான கு.கோபாலகிருஷ்ணன். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அமைச்சா் தங்கம் தென்னரசு நேற்று அவரது வீட்டிற்கு சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அங்கு அவருக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்றை வழங்கிய அமைச்சர் சிறிது நேரம் முதியவரிடம் உரையாடி, முதியவரின் உடல் நலனுக்காக நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார்.
அப்போது அனைவரும் நலமாக வாழவேண்டும் எனவும், கருணாநிதி எனக்கு வேண்டப்பட்டவர் என்றும் முதிர்ந்த குரலில் உரையாடிய முதியவரின் காலில் விழுந்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆசி பெற்றார் . பிறகு முதியவருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமைச்சர், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது;
எங்கிருந்தாலும் தமிழ் மொழியை யாரும் அழிக்க கூடாது, தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. திருவாரூரில் தமிழ் மொழி அழிக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. இதுபோன்று சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பது துருதிருஷ்டமானது.
தமிழ்நாட்டில் கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் 100 வயதுக்கு மேல் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் நேரடியாக அவா்களின் வீட்டுக்கே சென்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் கோபாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்நாள் சான்று வழங்கப்பட்டது.
கடந்த 1916-ஆம் ஆண்டு பிறந்த கோபாலகிருஷ்ணன், 2-ஆம் உலகப் போரில் இந்திய ராணுவத்தில் மோட்டாா் மெக்கானிக்காக பணியாற்றியவா். இதனையடுத்து, சுங்கத்துறை மற்றும் காவல்துறையில் பணியாற்றி, 1972-இல் ஓய்வுபெற்ற அவர், தற்போது ஓய்வூதியம் பெற்று வருகிறாா். தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அமலுக்கு வரும்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என்.கெளதமன், தாட்கோ தலைவா் மதிவாணன், சாா் ஆட்சியா் பானோத் ம்ருகேந்தா்லால், கூடுதல் ஆட்சியா் ரஞ்சித் சிங், கருவூல ஆணையா் விஜயேந்திர பாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி, நகா்மன்றத் துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
- பி.ஜேம்ஸ் லிசா