காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டுக்கு ஒரு கும்பல் தீ வைத்து சேதப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சல்மான் குர்ஷித். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தான் எழுதிய ’Sunrise Over Ayodhya: Nationhood in Our Times’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டனர். புத்தகம் வெளியானதில் இருந்தே சர்ச்சை கிளம்பியது. இந்தப் புத்தகத்தில், இந்துத்துவ கொள்கையை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபடுத்தி அவர் எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், அப்படி குறிப்பிடவில்லை என்று சல்மான் குர்ஷித் மறுத்திருந்தார். இந்துக்களின் உணர்வுகளை சல்மான் குர்ஷித் புண்படுத்தியதாகக் கூறி, 2 வழக்கறிஞர்கள் அவருக்கு எதிராக புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள சல்மான் குர்ஷித்தின் வீட்டை ஜெய் ஶ்ரீராம் முழக்கங்கள் எழுப்பிய படி, பாஜக கொடி பிடித்து வந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் அவர் வீட்டுக்கு தீ வைத்தும் உள்ளனர். இது தொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் சல்மான் குர்ஷித் வெளியிட்டுள்ளார். அதில் வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவத்துக்கு சல்மான் குர்ஷித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய, ராகேஷ் கபில் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.