5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தி – நேரில் சென்று வரவேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தியை விமான நிலையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில்…

5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தியை விமான நிலையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என திமுக மகளிர் அணி அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாநாட்டில் பங்கேற்க  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி,  தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி,  இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட  இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுகவின் மகளிர் அணி சார்பாக நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க  5 ஆண்டுகளுக்குப் பின்  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தர உள்ளார்.  இன்றிரவு 10:40 மணிக்கு சென்னை வரும் சோனியா காந்தியை விமான நிலையம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாளை காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சோனியா காந்தியை சந்தித்து தமிழ்நாடு அரசியல் சூழல்,  தொகுதிகள் எதிர்பார்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.