பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 21 முறை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்துபேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு மத்திய அரசே வழிவகை செயதுள்ளதாக குற்றம் சாட்டினார்.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் நிலையம் முன்பு, இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை, திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டையூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் நிலையம் முன்பு, ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.