காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் டெல்லியில் நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் “சிந்தன் சிவிர்” கூட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாபெரும் பேரணி நடத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவெடுத்தது. வேர்வை சிந்தாமல் மக்களை நேரடியாக சந்திக்க முடியாது என தெரிவித்த தலைமை இப்பேரணியில் கட்சியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமை, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்க உள்ளார். நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பேரணி மட்டுமின்றி தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் ஜூலை 21ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
– இரா.நம்பிராஜன்