இந்தியன்-2 பட பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2‘ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் தொடர்பாக லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையே பிரச்னை உருவானது. இதற்கிடையே ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், லைகா நிறுவனம் ‘இந்தியன் -2’ படத்தை முடித்த பிறகுதான் ஷங்கர் அடுத்தப் படத்தை இயக்கவேண்டும் என்றும் அவர் இயக்க இருக்கும் படத்துக்கு தடைகோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லைகா மற்றும் ஷங்கர் தரப்பில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது முடிந்து தீர்வு காண்பதற்கு 4 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான் என்று ஷங்கர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.