காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 51 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்றார். இதேபோல் மகளிருக்கான குத்துச்சண்டை பிரிவில் 45-48 கிலோ எடை பிரிவில் நிது கங்காஸ் தங்கம் வென்றார். மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் எல்டோஸ் பால் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்திய அணியின் (16 தங்கம் , 12 வெள்ளி, 17 வெண்கலம்) பதக்க எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. காமன்வெல்த் போட்டி இறுதி கட்டத்தில் இந்திய அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது.