லேப்டாப், மொபைல் என அனைத்திற்கும் ஒரே சார்ஜர்; வருகிறது புதிய திட்டம்

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜரை பயன்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக type c சார்ஜர்களை பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. லேப்டாப், டேப்லட்,…

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜரை பயன்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக type c சார்ஜர்களை பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

லேப்டாப், டேப்லட், மொபைல் உள்ளிட்ட அனைத்து வகையான சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜர்களை பயன்படுத்துவற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகளை மத்திய நுகர்வோர் துறை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய மற்றும் புதிய மின்னணு சாதனங்களுக்கு இடையே சார்ஜர்கள் பொருந்தாத காரணத்தால் பயனாளர்கள் ஒவ்வொரு முறையும் புதிய சார்ஜர்களையும்,அதற்கான கேபிள்களையும் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதை தவிர்ப்பதற்கும் மின்னணு கழிவுகளை குறைப்பதற்கும் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சாத்தியமாகியுள்ள இந்த நடைமுறையை இந்தியாவில் சாத்தியப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள பெரும்பாலான போன்கள் type c சார்ஜர் வடிவமைப்பை கொண்டுள்ளன. 12 ஆயிரத்திற்கு குறைவான போன்களும், லேப்டாப் போன்ற சாதனைகளும் வேறு வகையிலான சார்ஜர்களை கொண்டுள்ளன.

இந்த வேறுபாடுகளை கலைவதன் மூலம் ஒரே சார்ஜர் என்ற திட்டத்தை சாத்தியப்படுத்தலாம் என கூறப்படுகிறது மக்களுக்கும் சுற்று சூழலுக்கும் நன்மை பயக்கும் இந்த முயற்சி பலராலும் வரவேற்கப்படுகிறது.கடந்த நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்த சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை மந்திரமான LiFE கருப்பொருளின் அடிப்படையில் நுகர்பொருள் துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

–  சந்தோஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.