நகைச்சுவை நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில், வணிகவரித்துறை சோதனை நடைபெற்றது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பரோட்டா சூரி.இவருக்குச் சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ’அம்மன் உணவகம்’ என்ற உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் அம்மன் உணவகங்களுக்கு தலைமையிடமாக இருக்கக்கூடிய தெப்பக்குளம் பகுதியில் உள்ள அம்மன் உணவகத்தில் செந்தில் தலைமையிலான வணிகவரித்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்பது உறுதியான நிலையில் மூன்று நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த சோதனை குறித்து பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ”நடிகர் சூரி எனது தொகுதிக்காரர். என்னுடைய நல்ல நண்பர். திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளைச் சிலர் பரப்பி வருகின்றனர். வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையீடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வணிகவரித் துறை மூலம் 18,000 கோடி ரூபாய் வருவாயும், பத்திரப்பதிவுத் துறை மூலம் 8300 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக, நிலத்திற்கு சொந்தக்காரர்கள் உரிமையாளராக வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வணிகவரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள்” என்று கூறினார்.










