திருமணமாகி கைவிடப்பட்டவர்கள், திருமணமாகாத பெண்கள் ஆகியோர் 24 வாரம் வரையிலான கருவை கலைக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதில் திருமணமானவர், திருமணமாகாதவர் என்று பிரித்து பார்க்கக் கூடாது.
திருமணமான பெண்கள் தேவைப்படும் பட்சத்தில் 24 வாரம் வரையிலான தனது கருவை கலைக்க வழிவகைச் செய்யும் சட்டப்பிரிவு 3(2) (பி) திருமணமாகாத பெண்களுக்கும் பெருந்தும்.
கரு கலைப்பு என்பது திருமணமான பெண்களுக்கு மட்டுமே என்று சுருக்குவது அரசியல் சாசனம் 14க்கு எதிரானது என்று கூறி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது.
டெல்லியைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் தன் கருவை கலைக்க மருத்துவர்கள் மறுப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
ஆண் நண்பருடன் இணைந்து வாழ்ந்தபோது அவர் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பம் குறித்து தெரியவந்த பின்னர் அதனை கலைக்க மருத்துவமனை சென்றபோது திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து அப்பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார், ஆனால் அங்கும் அவரது கருக்கலைப்புக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது.
அதனைதொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார், அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை பிறப்பித்தது.








