தமிழ்நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 16 முதல் மே 6 வரை இப்போது தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். ஆனால், அந்த 103 நாட்களில் 63 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. அன்று தடுப்பூசிகளை கேட்டுப் பெறாததன் காரணமாக இன்று தமிழ்நாடு தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் வரிசையில் 9-வது இடத்தில் இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு – கேரளா எல்லையில் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது கடினமான ஒன்று. ஆனால், அதிகாரிகள் இதை திறம்பட கையாண்டு வருகின்றனர். கேரள எல்லையை ஒட்டிய 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்துவதை இலக்காக வைத்து அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி 10,000 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது என கூறினார்.







