ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதுடன் வழங்கப்படும் சான்றிதழில், முதலமைச்சர் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கம். கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த விருதில் முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். தற்போது, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக முதலமைச்சரின் படம் இல்லாமல் நல்லாசிரியர் விருது இந்த முறை வழங்கப்பட்டுள்ளது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னையை சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப்பின்னர், அரசு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். அதன்படி, 2020-21ம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் இடம் பெறவில்லை. அரசின் முத்திரையும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படமும் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







