திருப்பரங்குன்றம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மதுரை கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன் என்பவரின் மகன் விக்னேஸ்வரன்(22). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேஸ்வரன் கல்லூரி வகுப்பு முடித்துவிட்டு திருநகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகே, வந்த சீனிவாசன் என்பவர் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த விக்னேஷ்வரன் மீது மோதாமல் செல்வதற்காக முயற்சித்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விக்னேஷ்வரன் கீழே விழுந்தார். அப்போது மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவன் உயிரிழந்துள்ளது அப்பகுதியிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







