மாணவர்களின் ஆங்கில திறமையை வளர்க்க அனைத்து கல்லூரிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு புதிய முயற்சியை மேற்கொண்டு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இதற்கான இணையதளத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில் அமைச்சர்கள் பொன்முடி, சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, அதிகாரிகள் உதயச்சந்திரன், கார்த்திகேயன், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள், ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாக மாற்றவே நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல், மருத்துவத்தை நோக்கி ஓடிவருகின்றனர். பல்துறை சார் படிப்புகளைப் பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் தமிழ்நாட்டு மாணவர்கள்.

மாணவர்களின் திறன்களை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் நாடே செழிக்கும். நான் முதல்வன் இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். தொழிற் வளர்ச்சிக்கேற்ப கூடுதல் பாடங்களை கற்றறிதல் அவசியம். Cloud Computing,Machine Learning,Cyber Security,Robotics, AI உள்ளிட்ட புதிய படிப்புகளையும் மாணவர்கள் அறிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
புதிது புதிதாக தொழில்கள் உருவாகி வருகின்றன. எனவே மாணவர்கள் தனித்திறன்களை உருவாக்கிக் கொள்வது கட்டாயமாக உள்ளது. அப்படி இருந்தால் தான் கல்லூரி படிப்பை முடித்த உடன், வேலைவாய்ப்பைப் பெற முடியும். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் குறுகிய கால பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் மாணவர்கள் புலமை பெற்றிருக்க வேண்டும். நல்ல மொழியாற்றல் இருந்தால் தான், வளர்ச்சி கிடைக்கும். கல்லூரி மாணவர்களுக்கு பெரும் தடையாக இருப்பது ஆங்கில பேச்சாற்றல் தான். இதனால் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையே மாணவர்கள் கைவிட்டுவிடுகின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆங்கில பேச்சாற்றல் திறனை வளர்க்க அனைத்து கல்லூரிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் ஜெர்மன், ஜப்பானிய மொழி, பிரெஞ்சு மொழிகளும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட உள்ளது. ஆங்கில புத்தகங்களை வாசிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். போட்டித்தேர்வுகளுக்கும் தயாராதல் அவசியம். எனவே மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி, வேலை வாய்ப்புக்கேற்ற வகையில் தயார்படுத்த மைக்ரோசாப்ட், இன்போசிஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. இதேபோல், உலகின் தலைசிறந்த சாதனையாளர்களாகவும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வர வேண்டும். தமிழ் இளைஞர்கள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு; மாணவர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இலக்கை எட்ட அயராது உழைப்போம் என்று கூறினார்.







