மேலும் 12 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும்…

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதுமான நிலையில் , அதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும் , இன்று ( 13-2-2022 ) மற்றுமொரு நிகழ்வாகத் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த பன்னிரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் , இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அக்கடிதத்தில்,

“12.02.2022 அன்று , IND – TN – 10 – MM – 612 மற்றும் IND – TN – 10 – MM – 328 ஆகிய பதிவெண்களைத் தாங்கிய இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் சென்ற நிலையில் , 13.02.2022 அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடலுக்குள் கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது. தற்போது வரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளது. இதுபோன்று மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை மட்டுமின்றி வாழ்வாதாரங்களையும் மோசமாகப் பாதித்துள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக , நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், கோவிட் தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில் , கூட்டுச் செயற்குழுக் கூட்டம் ( JWG ) மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்கவும் வலியுறுத்த வேண்டும்.

மேலும் , அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகை செய்திட வேண்டுமென்பது எங்களது கோரிக்கை. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.