சேலம் அருகே சிறப்பு காவல் உதவியாளர் பெரியசாமி தாக்கியதில் உயிரிழந்த விவசாயி முருகேசன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று மாலை குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, விவசாயி முருகேசன் தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் காவலர் தாக்கியதில் விவசாயி முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில், குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவர் அளித்துள்ள அறிக்கையில், முருகேசனின் இறப்பு செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததோடு, முருகேசனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயி முருகேசனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.