ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து, கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தினசரி கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகளை மேலும் அறிவிப்பது குறித்து நாளை காலை 11மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மருத்துவ வல்லுர்களின் கருத்தையும் நாளை முதலமைச்சர் கேட்டறிவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.








