கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால், ஏராளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. கால்வாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகள் வெள்ளம் பெருக்கெடுத்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கன்னியாகுமரிக்கு இன்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோவாளையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அடுத்து திருப்பதிசாரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், துண்டிக்கப்பட்ட திருப்பதி சாரம் – தேரக்கால்புதூர் சாலை, கால்வாய்கரை சேதம், குழாய் உடைப்பு ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
பின்னர் குமாரகோவில் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தண்ணீர் சூழ்ந்ததால் விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர், வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட குமாரகோவில் கால்வாய் கரையில் பகுதியை முதலமைச்சர் பார்வையிட்டார். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் உடன் சென்றனர்.