காலை உணவு திட்டம் படிப்படியாக அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித சமரசமுமின்றி திமுக ஆட்சி செய்து வருவதாகவும், திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு வளர்ச்சி அமைய வேண்டும் என திட்டமிட்டோம் என்று கூறிய முதலமைச்சர், வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக வளர்ச்சியும் கூட, அது தான் திராவிட மாடல் வளர்ச்சி என்றும் தெரிவித்தார். திராவிட மாடல் வளர்ச்சி சரித்திரமாக ஏறுமுக பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் தொடக்க உரை ஆற்றினார், அன்று நடந்ததவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறிய முதலமைச்சர், நூற்றாண்டு கடந்த சட்டமன்றத்தை மீட்க, தான் தனது சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை தமிழக மக்கள் நன்று அறிவார்கள் எனத் தெரிவித்தார். ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநருக்கு அரசின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடந்த ஓராண்டில் 655 நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்றுள்ளதாகவும், அதில் 551 அரசு நிகழ்ச்சிகள் என்றும் அவர் தெரிவித்தார். தன்னுடைய சுற்றுப்பயணத்தால் நேரடியாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்றுள்ளதாகவும்,
7430 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்த பின் 3346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் 82% செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பெருமிதத்துடன் கூறினார்.
”4744 கோடி ரூபாய் மதிப்பில் 1442 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
மக்கள் மனங்களில் மகிழ்ச்சி என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு
காலை உணவு சாப்பிடும் குழந்தைகள், கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் முகத்தில் நாள்தோறும் உதயசூரியன் உதிக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க தமிழ்நாடு வருகிறார்கள். தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்ககூடிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் தொடங்குவதற்கான சிறந்த மாநில பட்டியலில் 14 வது இடத்தில் இருந்து 3 இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. நிதிக்காக ஒன்றிய அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அனைத்து நிதியையும் கேட்டு கேட்டு வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தை உயர்த்தினால் தான் நிதியை தருவேன் என்கிறது ஒன்றிய அரசு. அரசு ஊழியர்களுக்கு திமுக ஆட்சி அமைந்த பிறகு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 10338 பல்வேறு புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.” என்றும் தமது பதிலுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரானவர்கள், மதத்தித்கு அல்ல எனக் கூறிய முதலமைச்சர், அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து 3,150 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கூறினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 233 சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை அளித்துள்ளனர். ஒருவர் மட்டும் தரவில்லை. அவர் யார் என்று சொல்ல விரும்பவில்லை என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடன் அதிகமாக வாங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறு எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கடும் நிதி நெருக்கடி இருந்த போதிலும் திறமையான நிர்வாகத்தால் கடனை குறைத்துள்ளோம் என்று விளக்கம் அளித்தார்.
முந்தைய ஆண்டை காட்டிலும் 4 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகவே கடன் வாங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
10 ஆயிரம் கி.மீ சாலைகள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தரம் உயர்த்தப்படும்,
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் படிப்படியாக அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்படும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ம் ஆண்டு ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் நடைபெறும், அந்த மாநாடு பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமது பதிலுரையில் வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்க தமிழ்- வெல்க தமிழ்நாடு என கூறி உரையை நிறைவு செய்தார்.