மின் கணக்கீட்டை நுகர்வோர்களே அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை நுகர்வோர்களே அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.07.2021) தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசு கடந்த 2 மாதங்களில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.1,593 கோடி சேமித்தது குறித்து முதலமைச்சர் பாராட்டினார். மேலும் அனைத்து வகை செலவீனங்களையும் ஆராய்ந்து சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலைமையை சரி செய்யவும் அறிவுறுத்தினார்.
நுகர்வோர்கள், அவர்களுடைய மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை தாங்களே தங்கள் கைபேசி செயலி மூலம் அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறும், மின் கணக்கீட்டாளர்கள் கைபேசி செயலியின் மூலம் மின் கணக்கீடு எடுத்தவுடனேயே நுகர்வோர்கள் தங்களின் கணக்கீட்டு விவரத்தை அறிந்துகொண்டு கட்டணத்தை செலுத்த ஏதுவாக புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
ஆய்வுக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.