பொய்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மூலதனம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தன்னை போலி விவசாயி என்று விமர்சனம் செய்வதாகவும், விவசாயத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவசாயம்தான் தமது பிரதான தொழில் என்றும் அவர் கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய முதல்வர், அதிமுக தலைமையில் அமைந்திருப்பது வெற்றிக்கூட்டணி என்றும், திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் விமர்சித்தார். தேசிய அளவில், சிறப்பாக பணியாற்றியதற்கான பல்வேறு விருதுகளை தமிழக உள்ளாட்சித்துறை பெற்றுள்ளதாகவும், ஆனால் ஸ்டாலின் பொறாமையில் அவதூறு பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதாகவும், இம்மாவட்ட எல்லையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்கும் மாநிலம் தமிழகம் என்றும், சாதி, மத சண்டைகள் இன்றி அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







