அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு மூடு விழா நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், தொடர்ந்து வகுப்புகள் நடைபெற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சேர்ந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நீக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநில மொழிகளில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதனால் ஆங்கில வழியில் மழலையர் கல்வியும் தொடர் மேற் வகுப்பு ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் கல்வி கற்பிப்பது மேல் வகுப்புகளில் மாணவர்கள் கல்வியை புரிந்துகொண்டு எளிதாக கற்பதற்கு வாய்பாக அமையும்.
ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதின் மூலமாக பொருளாதார ரீதியாக பயனடைந்தனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் மழலையர் கல்வி ஏழை, எளிய மக்களுக்கு ஓர் வரப்பிரசாதம் ஆகும். அதோடு அவர்கள் மேற்கொண்டு தொடர் வகுப்புகளை அரசு பள்ளிகளிலேயே தொடர முடியும்.
இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்கை அதிகரிக்கும். ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . தற்பொழுது தமிழக அரசு இந்த கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி.யு.கே.ஜி வகுப்புகள் ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர ஏழை, ஏளிய மக்களுக்கு அல்ல. அதோடு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய அதிக வாய்புள்ளது.
தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை படிக்க வைத்துவிட்டு தொடர் வகுப்பிற்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும். இதனால் அரசுப் பள்ளிகளுக்குதான் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையை மனதில் கொண்டும் , மாணவர்களின் தொடர் வகுப்புகள் தடைபடாமல் தொடரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புக்கு மூடு விழா நடத்துவது தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறையும் நிலை உருவாகும். முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுபோல் தமாகா தலைவர் ஜிகே.வாசனும் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும், அதனை நீக்கும் முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








