சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜோவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரயில் செல்லும் சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் ரயிலில் பயணம் செய்த 12 பேர் உயிரிழந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 500 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல்போனவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

மழை வெள்ள தடுப்பு பணிகள் மிகவும் கடினமாகி உள்ளதாக அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளப்பெருக்கானது கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.







