சீனாவே எங்களது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், சீனாவின் அதிபருமான ஜி ஜின்பிங்கை தனது உரையில் குறிப்பிட்டு பேசிய மகிந்த ராஜபக்ச, இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகுக்கு சீனாவே உதவியது என்றும் குறிப்பிட்டார்.
“சீனாவுடனான இலங்கையின் நட்பு வரலாற்று சிறப்புமிக்கதாகும், அந்த நீண்ட வரலாற்றில் சீனா எங்களுடன் செயற்பட்டுள்ள விதத்தின் அடிப்படையில் சீனாவே எங்களின் உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்” எனவும் அவருடைய உரையில் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை அங்கீகரிக்கும் பொருட்டும், ஒரு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “நாம் 1957ஆம் ஆண்டிலேயே சீன அரசாங்கத்துடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினோம். சீனாவை சுதந்திர சீனா’வாக மாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நமது நாடு ஏற்கனவே இடதுசாரி வணிக உறவுகளைப் பேணி வருகிறது” என்றும் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியே தற்போது உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என தெரிவித்த அவர், அந்த அரசியல் கட்சியின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கொள்கைக்கு அமைய, 70 ஆண்டுகளாக உலகுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை அது வழங்கியுள்ளது என்று கூறினார். மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுதான் சீனாவை உலக அரங்குக்கு உயர்த்தியது என்றும் ராஜபக்ச தனது உரையில் குறிப்பிட்டார்.
சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. பிற நாடுகளின் விவகாரங்களை தாம் ஒழுங்குறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற உணர்வை சீனா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.







