நம்ம ஸ்கூல் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சார்பாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள பள்ளியையும், கல்வியையும் தரம் உயர்த்துவதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளிகளில் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், தனியார் தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியுதவி கிடைக்கும் வகையில் “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் ” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் (logo) இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டை அரசு சார்பில் இந்த ஆண்டு நடத்தி இருக்கிறோம். இன்று அவர் பிறந்த நாளில் அரசு பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். நெருக்கமான தோழமை என்றால் பள்ளி தோழர்கள் தான். நேற்று பார்த்தவர்களை கூட மறந்து விடுவோம். ஆனால் சிறு வயது ஆசிரியரை மறக்க மாட்டோம். நாம் உயர்ந்து நிற்பதற்கு உதவிய பள்ளிகளுக்கு நாம் உதவ தான் இந்த திட்டம் என்று கூறினார்.
எல்லாவற்றையும் அரசாங்கம் மட்டுமே செய்து விட முடியாது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டு இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பில், நம்பர் ஒன் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் என்று வந்ததது. அப்போது நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என்று வர வேண்டும் என்று சொன்னேன். அது இப்போது நடந்துள்ளது மகிழ்ச்சி என்றார்.
இல்லம் தேடி கல்வி திட்டம் முழு வெற்றியை கொடுத்து வருகிறது. எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. கல்வி யாராலும் திருட முடியாத சொத்து. அதை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம்.
37,558 பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் ஒரு கட்டமைப்பு நிறுவனமாக ஒருங்கிணைந்து தங்கள் பள்ளிக்கு தேவையானதை செய்ய முன் வந்துள்ளனர். இதை அரசு மட்டும் செய்ய முடியாது. உங்கள் ஆதரவும் தேவை, உள்ளூர் மக்களுடன், தொழில் துறையினர் உடன் இணைந்து செயல்பட உள்ளது. நீங்கள் தரும் 1 ரூபாய் கூட சரியாக பயன்படுத்தப்படும். நம்ம ஸ்கூல் பவுண்டேசன் தொடக்கமாக நானே என் சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் அளிக்கிறேன் என்றார். தொழில் அதிபர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டு கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.வி.எஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.