அதானி விவகாரம், பிபிசி ஆவணப்படம், சேதுசமுத்திர திட்ட பிரச்னைகளை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்தும், கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக திமுக கழகம் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில், வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்புவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதில் கழகத் தலைவரான ஸ்டாலின், தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறை குறித்து ‘பிபிசி’ வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை குறித்தும், இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை மற்றும் இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோன்று, தமிழ்நாடு அரசால், ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் – முக்கியமாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது,. தமிழக மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது,. சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது; மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது; சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது; கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூசிகளைப் பெறுவது;
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது; என்.எல்.சி. நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது; இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் – அகில இந்தியாவில் எதிரொலிக்கும் பிரச்சினைகள் குறித்தும் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டுமென அறிவுறுத்துப்பட்டது என திமுக கழக அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா