வாரிசு படம் வெற்றியை தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வாரிசு பட இயக்குனர் வம்சி சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பொங்கலை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும், 11 நாட்களில் 250 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ‘வாரிசு’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். இதில் விஜய்யுடன் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன் , பாடலாசிரியரும், படத்தின் வசனகர்த்தாவான விவேக் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாரிசு பலம் வெற்றியை தொடர்ந்து இன்று காலை வாரிசு பட இயக்குனர் வம்சி பைடிபைலி தனது குடும்பத்தினர் மற்றும் பட குழுவினருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அப்போது அண்ணாமலையார் கோவில் சார்பில் அவருக்கு சிறப்பு தரிசனம் மற்றும் கோவிலில் மரியாதை ஆகியவை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது..
“வாரிசு படம் வெற்றியை தமிழக மக்கள் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். தமிழக மக்கள் தங்கள் மீது மிகுந்த அன்பை வைத்திருந்ததற்கு மிகுந்த நன்றி ” என வாரிசு இயக்குனர் வம்சி கூறினார்.
– யாழன்







