கோவை ராமநாதபுரம் – சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் கட்டபட்ட
மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று பொதுமக்களி்ன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
கோவை – திருச்சி சாலையில் ராமநாதபுரம் பகுதியிலிருந்து அரசு மருத்துவமனை வரை
சுமார் 3.15 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 238.88 கோடி செலவில் கட்டபட்ட மேம்பாலம்
மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ. 59.68 கோடி
செலவில் 1.75 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டபட்ட மேம்பாலம் ஆகியவற்றின் திறப்பு
விழா இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி
வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டு திறந்துவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் செந்தில் பாலாஜி, ராமநாதபுரம்
பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொது பயன்பாட்டிற்கு கொடியசைத்து
திறந்து வைத்து அதில் பயணம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த
சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி
சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிஆர் நடராஜன், சண்முகசுந்தரம்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாலம் திறப்பு விழாவிற்கு பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து, திமுகவினர் அப்பகுதியில் நடப்பட்டிருந்த கொடிகளை பிடிங்கி கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்த போது ஒன்று திரண்ட அதிமுக, திமுக, பாஜக தொண்டர்கள் தங்களின் கட்சி கொடிகளை கைகளில் ஏந்தியவாறு ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழக முதல்வர் இந்த பாலத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த பாலமானது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று அர்ப்பணிக்கப்படுகிறது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. முதலமைச்சர் திருக்கரங்களால் இந்த பாலமானது இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக இதுபோன்ற பாலங்கள் மற்றும் சாலைகள் அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு திறந்து வைத்திருக்க வேண்டும். இருந்தபோதும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் உடனடியாக அதை சரி செய்து தற்போது பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார் என்றார்.
அதனை தொடர்ந்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்
செய்தியாளர்களிடம் பேசும்போது, கோவையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
சுங்கம்-ராமநாதபுரம் மேம்பாலம் மற்றும் கவுண்டம்பாளையம் மேம்பாலம் ஆகிய
பாலங்களை திறந்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை
வைத்துவந்த நிலையில் தற்போது முதலமைச்சர் இரண்டு பாலங்களை பொது
பயன்பாட்டிற்கு திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கோவையின் தொழில்
வளர்ச்சிக்கு பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளையும், அதேபோல் மெட்ரோ ரயில்
திட்டங்களையும் முதல்வர் முன்னெடுக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் மேம்பாலப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய பாதி அளவு
நிறைவுற்ற நிலையில் தற்போது முதல்வர் இந்த பாலத்தை திறந்து வைத்துள்ளார். இந்த பாலம் திறப்பு விழாவிற்கு பிரதான அரசியல் கட்சிகள் அனைவரும் வந்திருப்பது மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஜனநாயக முறைப்படி இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக பார்க்கிறேன். மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றை களைந்து மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை முதல்வர் விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா