ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று விபத்து குறித்து அறிந்த உடனையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக ரயில் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனையடுத்து, ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் உதவித்தொகையாக முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், வெள்ளிக்கிழமை நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புவனேஸ்வர் மற்றும் பாலசோர் இடையே உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா