சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எப்படி பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் பணிகள் உள்ளதாக தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால் சென்னையில் மழைநீர் வடிகால்கள் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மண்டலம் 5-க்கு உட்பட்ட என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்ட்ரல் ஸ்டேசன், வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சந்திப்பு பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மண்டலம் 6-க்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, Demellows சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் வேலவன் நகர், கொளத்தூர் கோயில் தெரு பகுதிகளிலும் ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையடுத்து கொளத்தூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மழை அவ்வவ்போது பெய்து வருவதால் வேலைகள் தடைபட்டுள்ளது என்றார். நிச்சயம் குறைந்தபட்சம் 15 நாள், அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என கூறினார். மழைநீர் வடிகால் பணிகளில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் பணிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்