44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை பிரம்மாண்டமாக தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் உலகில் உள்ள 180 நாடுகளை சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒருங்கிணைந்து நடத்த முதலமைச்சர் தலைமையில் 23 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராக கொண்ட அக்குழுவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலர், நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர், விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்ப்ட்டுள்ளனர்.
இக்குழு அவ்வப்போது கூடி ஆய்வு கூட்டங்கள் மேற்கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







